← முகப்பு செய்திகள்

தமிழகத்தில் முந்தைய மாடல் ஆட்சியில்தான் போதைப் பொருள் கலாச்சாரம் தெருவுக்கு தெரு பெருகியுள்ளது. அதுதான் பல

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 24 பார்வைகள்
தமிழகத்தில் முந்தைய மாடல் ஆட்சியில்தான் போதைப் பொருள் கலாச்சாரம் தெருவுக்கு தெரு பெருகியுள்ளது. அதுதான் பல
தமிழகத்தில் சகோதரிகளை நாம் இழப்பதற்கு போதைப் பொருள் கலாச்சாரமே காரணம்: திருச்சியில் முதல்வர் விஜய் வேதனை

தமிழகத்தில் முந்தைய மாடல் ஆட்சியில்தான் போதைப் பொருள் கலாச்சாரம் தெருவுக்கு தெரு பெருகியுள்ளது. அதுதான் பல பிரச்சினைகளுக்கு காரணம். அதனால்தான் நமது சகோதரிகளை இழக்கிறோம் என்று திருச்சியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய் தெரிவித்தார். திமுகவும், அதிமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்கத் திட்டமிட்டதுதான் குதிரை பேரம் என்றும் குற்றம்சாட்டினார். லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சி ஒரே நாளில் நடக்காது. ஆனால், நிச்சயம் ஒருநாள் அதை செய்வேன் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்துள்ளது. சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்ற விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

உற்சாக வரவேற்பு

இதன்பின்னர், முதல்வராகப் பதவியேற்ற அவர், தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல்முறையாக, திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நேற்று திருச்சிக்கு வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதை தொடர்ந்து, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசியதாவது:

தமிழகத்துக்கு இதயம்போல இருப்பது திருச்சி. அதுபோல, எனது இதயத்துக்கும் மிகவும் நெருக்கமானது திருச்சி கிழக்கு தொகுதி. எனக்கு ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. தமிழக மக்கள் இன்னும் கொஞ்சம் அதிகம் ஆதரவு தெரிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

‘ஆட்சி அமைந்து 6 மாதம் அமைதியாக இருப்போம்’ என்று கூறியவர்களால் 6 நாள்கூட அமைதியாக இருக்க முடியவில்லை. எங்களுக்கு எதிராக பேசுபவர்கள் பேசிக்கொண்டே இருங்கள். நாங்கள் நல்லது செய்துகொண்டே இருப்போம். அதிகாரம் செய்பவர்கள், ஆதிக்கம் செலுத்துபவர்கள்தான் கோட் சூட் போட வேண்டுமா? நாங்களும் போடுவோம். அதுவும் நாங்கள் அணியும் கருப்பு வெள்ளை என்பது, நாங்கள் எப்படி வெளிப்படையாக செயல்படுகிறோம் என்பதை வெளிக்காட்டுகிறது.

தவெக – திமுக இடையே போட்டி: அரசியல் ரீதியாக தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி. இதற்கு நடுவில் யாருக்கும் எந்த வேலையும் கிடையாது. வேறு எந்த கட்சிக்கும் இங்கு இடம் இல்லை.

குதிரை பேரம் நடத்துவது யார்?

எங்களைப் பார்த்து குதிரை பேரம் நடத்துகிறோம் என்று விமர்சிக்கின்றனர். இந்த விஜய் ஆட்சி அமைக்கக் கூடாது என்று திமுகவும் மற்றும் பலரும் (அதிமுக) சேர்ந்து பல கூத்துகளை செய்தனர். இருவரும் சேர்ந்து ஆட்சி அமைக்கவும் திட்டமிட்டனர். இதுதான் குதிரை பேரம்.

தீய சக்தியும், தீர்ந்துபோன சக்தியும் பேரம் பேசி, ஆட்சி அமைத்து கொள்ளையடிக்க திட்டம் போட்டனர். திமுக தீய சக்தி மட்டுமின்றி, மக்களிடம் இருந்து தூரமாகப் போன தூர சக்தி ஆகிவிட்டது. மேலும், தீர்ந்துபோன சக்தியோடு சேர்ந்து ஆட்சி அமைக்க நினைத்து, திமுக தூர்ந்துபோன சக்தியாகவும் ஆகிவிட்டது. திமுக நம்மை எதிர்க்க, எதிர்க்க அவை அத்தனையும் நமக்கு நன்மையே.

நாம் ஆட்சிக்கு வந்த பிறகு, இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் சட்டப்பேரவையில் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனிக்கின்றனர். முன்பு ரீல்ஸ் போட்டவர்கள் எல்லாம் இப்போது நியூஸ் பார்க்கிறார்கள். அரசியல் குறித்து பெண்கள், இளைஞர்கள் உட்பட அனைவரும் தெரிந்து கொள்கின்றனர். இதெல்லாம் நல்ல விஷயம்தான்.

தவெகவை ஆதரிக்கும் மக்களை எல்லாம் தற்குறி என்று விமர்சித்தீர்கள். அப்படி நீங்கள் யாரை கூறினீர்களோ, அவர்கள்தான் இன்று உங்கள் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கி உள்ளனர். அண்ணா தொடங்கிய கட்சியை அடிமைக் கூடாரம் ஆக்கிவிட்டு, ‘உண்மை சொல் உடன்பிறப்பே’ என்று இப்போது கூறுகிறீர்கள். திமுகவின் இந்த நிலைக்கு காரணம் உங்கள் குடும்பம்தான் என்று திமுக தொண்டர்களே கூறுகின்றனர்.

நாம் ஆட்சிக்கு வராமல் தடுக்க, திமுக பல சதிகளை செய்தது. இனிமேலாவது ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டு, மக்கள் மனதில் இடம்பிடிக்கப் பாருங்கள்.

ஆட்சிக்கு வந்த பிறகு, மக்களுக்கு தொந்தரவாக இருந்த டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளேன். ஒரு மாத காலத்தில் என்ன செய்ய முடியுமோ அதன் அடிப்படையில், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

200 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதை விமர்சிக்கின்றனர். 100 யூனிட் இலவச மின்சாரம் கொடுத்தது நீங்கள் அல்ல. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. நிதிக்கான அனைத்து கதவுகளையும் நீங்கள் அடைத்து வைத்துவிட்டீர்கள். அதை முதலில் நாங்கள் சரிசெய்ய வேண்டும்.

நமது ஆட்சி வந்த சில நாட்களிலேயே, ‘அது சரியில்லை.. இது சரியில்லை’ என்று விமர்சனம் செய்கின்றனர். ஆனால், முந்தைய மாடல் அரசில் போதைப் பொருள் கலாச்சாரம் தெருவுக்கு தெரு பெருகியுள்ளது. அதுதான் இப்போது பல பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது. அதனால்தான் நமது சகோதரிகளை நாம் இழக்க நேரிடுகிறது.

மக்களின் பாதுகாப்புக்காக தகுதியான அதிகாரிகள், காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். ‘சிங்கப்பெண் சிறப்பு படை’ அடுத்த வாரம் தொடங்கப்படும். எங்கள் மீது என்ன பழி சுமத்தினாலும், நாங்கள் மக்களுக்காக இருப்போம்.

சாதி, மதம், வாக்குக்கு பணம் கொடுப்பது என்பதை எல்லாம் இந்த தேர்தலில் உடைத்துள்ளோம். ஸ்டாலின்போல எந்த ஊசலாட்டமும் எனக்கு இல்லை. மதச்சார்பற்ற தன்மையில் எந்த சமரசமும் இல்லை. மாநில உரிமை, நதி நீர் உரிமைகளை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம்.

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உங்களில் ஒருவரைதான் நிற்க வைப்போம். அவர்களுக்கு வெற்றி தாருங்கள். லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சி ஒரே நாளில் நடக்காது. ஆனால், நிச்சயம் ஒருநாள் அதை செய்வேன். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.

மேலும் செய்திகள்
செய்திகள்
Ban vs Aus 1st odi- Bangladesh Clinches Historic ODI Win Against Australia
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
Ind a vs SL A- Ruturaj century Powers India A Edge Sri
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
India T20I Squad For Ireland And England Tour- Mohammed Siraj Rested Prasidh
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
சொல்லும் விஷயத்தை யதார்த்தமாகச் சொல்லவேண்டும். சொ பண்டிதர்களுக்கு மட்டும் புரியக் கூடியவற்றை பாமரர்க்கும் புரி
3 மணி நேரம் முன்னர்
செய்திகள்
வியட்நாம் நாட்டில் இந்தியப் பெண் ஒருவர் 'ரீல்ஸ்' (Reels) வீடியோவிற்காகப் பொது இடத்தில் துண்டை கட்டிக
4 மணி நேரம் முன்னர்
செய்திகள்
விஜய் தொடங்கிய ‘சிங்கப்பெண்’ படை பற்றி காவலர்கள் கூறுவது என்ன? எதிர்க்கட்சிகள் முன்வைத்த 3 விமர்சனங்கள்
4 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net