இந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின், தற்போது நடைமுறையில் உள்ள திறந்த பொருளாதாரக் கொள்கையை மறுபரிசீலனை செய்வதுடன், சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகளை மீளாய்வு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டியுள்ளார்.
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) கொழும்பு பேராயர் இல்லத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தானம் வழங்கும் நிகழ்வின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
1978 ஆம் ஆண்டு இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையானது, எமது நாட்டின் உற்பத்தித் திறனைப் பாதித்துள்ளது. ஒரு காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து தன்னிறைவு பெற்றிருந்த இலங்கை, தற்போது இறக்குமதிகளை மாத்திரமே நம்பியிருக்கும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த இறக்குமதிச் சார்புத்தன்மை காரணமாகவே நாட்டின் செலவுகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளன. இந்த பொருளாதார மாதிரியை மாற்றியமைக்க வேண்டிய தருணம் இதுவே.
சர்வதேச நாணய நிதியம்தொடர்பில் நாட்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ‘சர்வதேச நாணய நிதியம் என்பது மக்களின் நலனை முன்னிறுத்தித் தீர்மானங்களை எடுக்கும் அமைப்பல்ல, அது ஒரு வங்கி போன்றது. அவர்களின் முதன்மை நோக்கம் இலாபம் ஈட்டுவதே தவிர, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதல்ல.
எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளுக்கு அமையவே நாட்டை நிர்வகிப்போம் என்று முடிவெடுத்தால், எதிர்காலத்தில் இவ்வாறான குழப்பங்களும் நெருக்கடிகளும் தொடரவே செய்யும். அந்த நிபந்தனைகளுக்கு அடிபணிந்து நாட்டை கொண்டு செல்ல முடியாது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலையேற்றம் ஏற்பட்டுள்ளமை, இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரத்தை நேரடியாகப் பாதித்துள்ளது. இவ்வாறான சவாலான காலகட்டத்தில், அரசாங்கம் மக்களின் வாழ்வாதாரச் சுமையைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
ஊழலுக்கு எதிரான முறையான பொறிமுறையை உருவாக்குவதிலும், அரசாங்கத்தின் வர்த்தக நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்வதிலும் தற்போதைய நிர்வாகம் தோல்வியடைந்துள்ளதையே காண முடிகிறது.
நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு அரசியல் தலைவர்கள் பழைய சிந்தனை முறைகளைக் கைவிட்டு, புரட்சிகரமான மற்றும் புதிய அணுகுமுறைகளைக் கையாள வேண்டும். மக்கள் அனுபவிக்கும் இந்தத் துன்பகரமான சூழலை மாற்றியமைக்கத் தவறும் பட்சத்தில், பொருளாதாரத்தை எக்காலத்திலும் சீரமைக்க முடியாது. பொருளாதாரச் சரிவுக்கு மத்தியிலும், நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் நாட்டின் நலனுக்காகச் சிந்திக்க வேண்டிய தருணம் இது என்றார்.